Pages

Wednesday, 19 September 2012


மணல் வீடுகளாய் குமிந்திருந்த
ஒவ்வொரு ஞாபகத் துணுக்குகளும்
இடைவெளி பற்றிக் கரையத்துவங்கும்
வேளையில் மரணிக்கத்துவங்கியிருந்தேன்.

பொழுது சரியத்துவங்கிய அந்த நொடி
மிகச்சரியான கணமாகப்பட்டது
வாழ்வின் வெளிகள் மிகக்கவனமாய்
தன்னை இருள்சூழ ஆயத்தப்படுத்திக்கொண்டது.

இதுவரை மிகைப்படுத்தாத துயரம் தன்னை
முன்னிலைப்படுத்தத் துவங்கியது என் மரண நொடிக்கு
பிறிதொரு காரணத்தை காரணியாக்க விரும்பாமல்

விம்மிவெடிக்கும் ஒரு நினைவு மட்டும்
வெளியேற தோன்றாமல் உள் நோக்கி
பயணத்தை தொடங்கியது

மிதந்தலையும் காற்றினைக்குறுக்கி இழுத்து
இசைக்கும் குழலிசையாய் உன் நினைவுகளை
நிலை நிறுத்தி சுவாசத்தினை
கமறலென வெளிப்படுத்தி திருப்தியுறுகிறேன்

மிகப்பெரும் சரிவை நோக்கி
உருண்டோடத்துவங்கிய சுவாசம்
மென் தடைகளை வலிப்பிழிந்து
கடக்கத்துவங்கிய கணம் மெல்ல வெளியேறுகிறேன்.

2 comments:

  1. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    ReplyDelete