Pages

Tuesday 24 July 2012



யாருமேயில்லாத இரவுக்குள்

பெரும்பாலும் என்னைத்தொலைத்து

விடுவதே வாடிக்கையாயிற்று என் கனவுகளுக்கு.



மீசையை நீட்டிக்கொண்டு

நாவால் உதடுவருடிக்கொண்டிருக்கும் பூனையோ

கிளைமீது தனித்திருந்து நதி நீரில்

நெளிந்து செல்லும் மீனைக்கவ்விப்பறக்கும்

மீன்கொத்தியோ,



நெடுமலையின் உச்சியிலிருந்து

தலைக்கீழாய் விழுந்துவிடவோ,

இருட்டறையில் பாம்படம்

அணிந்த பாட்டிகளின் அருகில்

மணப்பெண்ணாகவோ,



அறைமுழுதும் சிதறிக்கிடக்கும்

சந்தனத்திலும், பூக்களிலும்

பிரண்டுசெல்வதாகவோ,

இறந்துப்போன அம்மாவின்

சேலைப்பற்றி கதைசொல்வதாகவோ

பழுத்தோலைகளின் நடுவே மணல்கீறும்

சிறுமியாகவோ



ஒரு கனவும் வருவதேயில்லை

கனவுகளில் தொலைபவருக்கு

கனவுகள் வராமல்தான் இருக்குமோ.


ஒற்றை நிலை



புறந்தள்ளலின் ஒவ்வொரு

முடிவும் உன் ஸ்பரிசங்களில்

சமனப்படுத்திக்கொண்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



நமக்கான மாற்றங்கள்

ஒவ்வொரு ஊடலிலும் மிகமிகப்

பெரிதாய் மறைக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



பிணைக்கப்பட்டதற்காய்

பிணைந்திருந்து, சங்கிலி

அறுபடக்காத்திருந்து பிரிந்ததாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



ஒவ்வொரு வார்த்தையின் இறுதியும்

முடிக்கப்படாமல் கடந்ததிலேயே

ஏதோ ஒன்று உன்னிடமிருந்து முடிக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.





வெற்றிடக்குமிழினுள் அடைப்பட்டிருந்த

காற்றாகவே நீ இருந்ததாய்

எனக்கு காண்பித்து சென்றாய் என்பதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



எனவே தான் உன் ஒதுக்கத்தின் முன்

ஒதுங்குதலுமாய்,புறக்கணிப்புக்குமுன்

புறக்கணித்தலுமாய் முன்னேறிக்கொண்டு

விரைந்து விடுகிறேன்.



சமனற்ற நிலையாகவே

தோன்றவில்லை நீ ஒதுக்கி சென்றபோதும்,

உன் தீர்க்க முடியா காதல்

தீர்ந்த புள்ளியாகவே என் ஒற்றை நிலை.



மலைகள் இதழில் வெளியாகிய கவிதை