Pages

Wednesday 30 January 2013




நினைவுகளின் நிழல்கள்

உதிர்ந்துக்கொண்டிருக்கும்
இலைகளின் இடைவெளியில்
கரைத்துக்கொண்டிருக்கிறது உன்னைப்பற்றியதான
நினைவுகளின் நிழல்கள்.

அழுந்தப்பற்றிக்கொண்டிருக்கும்
கால்களின் விசையை நழுவச்செய்து விடுகிறது
உன் காதல் ஓய்ந்த பாதைகளின் ஈரம்.

தோற்றப்பிழைகளினூடே கரைந்து
வெற்றுப்பரப்பின் ஏதோ ஒரு மணற்துளியில்
அமர்ந்துக்கொள்கிறது உன் மீதான ப்ரியங்கள்.

கிளர்ந்தடங்கிய உணர்வுகளின் கணங்களில்
எப்பொழுதோ அடக்கி வைத்திருந்த ஒரு காதல்
முழு ஆயுளையும் ஒரு சேரப்பற்றி விடுகிறது.

வார்த்தைகள் வெளிவராது தவித்திருந்த
சூன்யப்பொழுதுகளை நிறைத்துக்கொள்கிறது
உன் பொலிவிழந்த கோபங்களின் நிறங்கள்.

அழுத்தம் தாளாது வெடிக்கக்காத்திருக்கும்
நம் வறண்டப்பக்கங்களின் தனிமை
எப்பொழுதேனும் உன்னிடம் சொல்லிவிடக்கூடும்.

ஆழப்பெரு மூச்சொன்றின் வெப்பத்தை
உன் வழித்துணைக்காய் காற்றில் செலுத்தி
உன்னுடனான பிணைப்பை விடுவித்துக்கொள்கிறேன்.


- அதீதத்தில் 





மறுதலிக்கும் கணங்கள்


தாழ்வாய் பறந்து மேலெழும்பும் பறவையின்
லாவகத்துடன் கடந்து விடுகிறாய்
என் ஒவ்வொரு பிரியத்தையும்.

மரங்களற்ற வனாந்திரத்தில் பூ தேடும்
வண்ணத்துப்பூச்சியின் பசியைவிடக்கொடிது
நீ மறுதலித்து செல்லும் கணங்கள்.

நீள் பிறப்பிற்கான வாதைகள் தொலையும் 
உன் நேசப்பரிமாறல்களை எதிர்ப்பார்த்து 
சுவாசங்களை இருத்திக்கொள்கிறேன்...


நிழல் பற்றி கடந்து செல்லும் மறு உயிராய்
என் இருப்புக்களை கவர்ந்துக்கொள்கிறாய்
வேறொருவருக்கான காதலை நீட்டித்துக்கொண்டு...