Pages

Thursday 4 October 2012



அதீதத்தில் வெளியானது...


மீள் பிறப்பு





மன்னித்தலுக்கும் மரணித்தலுக்குமாய்
பகடையாக உருண்டு கொண்டு இருக்கிறது
வாழ்க்கை ஒவ்வொரு முறையும்

மன்னிக்க முடியாத செய்கைகளின்
பிரதிபலனாய் மரணித்துப்போவென
வலுவுற்ற வார்த்தைகளே சடங்காகிப்போகும்.

மீள்பிறப்பிற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும்
உன் வார்த்தையின் விளிம்பில் தொக்கி நிற்கும்

வலுக்கட்டாயமாக பெறப்படும் மன்னித்தல்களின்
மகிழ்வுகளில் என்னை ஏந்திக்கொள்கிறாய்

சிறு பிடிப்புக்களாய் நம்பிக்கையின்
இழைப்பற்றி சுவாசித்துக்கொள்கிறேன்

உன் விரல்களின் அசைவுகளில்
என் வாழ்வின் ஆயுளை எதிர்ப்பார்த்திருக்கிறேன்
உனக்கும் என் காதலுக்குமான சதுரங்கத்தில்..


Wednesday 19 September 2012


மணல் வீடுகளாய் குமிந்திருந்த
ஒவ்வொரு ஞாபகத் துணுக்குகளும்
இடைவெளி பற்றிக் கரையத்துவங்கும்
வேளையில் மரணிக்கத்துவங்கியிருந்தேன்.

பொழுது சரியத்துவங்கிய அந்த நொடி
மிகச்சரியான கணமாகப்பட்டது
வாழ்வின் வெளிகள் மிகக்கவனமாய்
தன்னை இருள்சூழ ஆயத்தப்படுத்திக்கொண்டது.

இதுவரை மிகைப்படுத்தாத துயரம் தன்னை
முன்னிலைப்படுத்தத் துவங்கியது என் மரண நொடிக்கு
பிறிதொரு காரணத்தை காரணியாக்க விரும்பாமல்

விம்மிவெடிக்கும் ஒரு நினைவு மட்டும்
வெளியேற தோன்றாமல் உள் நோக்கி
பயணத்தை தொடங்கியது

மிதந்தலையும் காற்றினைக்குறுக்கி இழுத்து
இசைக்கும் குழலிசையாய் உன் நினைவுகளை
நிலை நிறுத்தி சுவாசத்தினை
கமறலென வெளிப்படுத்தி திருப்தியுறுகிறேன்

மிகப்பெரும் சரிவை நோக்கி
உருண்டோடத்துவங்கிய சுவாசம்
மென் தடைகளை வலிப்பிழிந்து
கடக்கத்துவங்கிய கணம் மெல்ல வெளியேறுகிறேன்.

Monday 17 September 2012


உனக்கு மட்டும் நான் வித்தியாசப்பட்டதின்
காரணம் புரிந்தும் எனக்கு
ஒன்றேனும் வித்தியாசமாகப்படவேயில்லை
உன்னை ஒவ்வொரு முறை பார்க்கையிலும்.


கவிந்து நடக்கும்போதோ, 
கண்ணோடு நோக்கையிலோ
வார்த்தைகளில் குவிந்த கவனம்
மாறியதேயில்லை.

உணர்வுகளும், கருத்துக்களும்
பரிமாறிய இடங்களில்
பார்வை பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாயும்
நினைவிலில்லை.


தவறவிட்ட பேருந்துகளின் பயணங்கள்
உன் வாகனத்தில் தொடர்கையில் நானும்
என்றேனும் கவனித்தொதுங்கியிருக்கலாம்
தெரியாமல் உன் மேல் பட்டதை. 


விசைப்பலகையில் வார்த்தைகள்
தவறுதலாய் அழுத்தப்பட்டதாகவே 
இப்பொழுதும் உணர்கிறேன் நம்
தவறுகளை .

விரல் பிடிக்கையில் எவ்வித 
செல் மாற்றங்களும் உனக்குள்
நிகழவில்லையெனில் என் தோள்
பற்றும் தோழனாக இரு.


எல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே
தான் எப்பொழுதும் திருப்தி எனக்கு

தாகம் தணித்துவிடவோ
கறைகளை கழுவிடவோ
பச்சைகளை செழித்து விடவோ
கூரான கற்களை முனைமழுக்கிடவோ
இறுமாந்திருந்த கற்களை துகள்களாக்கிடவோ
கரைப்புரண்டு ஓடி கடலில் கலந்திடவோ
தான் தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்

சில வேளைகளில் பிண்டங்களும்
கீழத்தெருக்களின் எச்சில் இலைகளும்
எருமைகளின் சாணக்கழிவுகளும்
திருமணவீட்டின் எஞ்சிய விருந்தும்
ஒன்றாகவே கலந்து மிதந்துவருகின்றன.

இருந்தும் ஒவ்வொருவருக்கான நதியாகத்தான்
என்னை எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்




- நவீன விருட்சத்தில் ...

Saturday 15 September 2012


ஒரு பரிவையோ,
ஒரு மன்னிப்பையோ,
ஒரு காதலையோ யாசிக்காத 
மௌனம் உதிர்ந்து விழுந்த 
ஒரு சருகினைப்போல் 
தன் ஆயுளை முடித்துக்கொள்கிறது.

                          *
ஒரு கவிதையின் இரு வார்த்தைகளுக்குள்
உறங்கும் மௌனம் பிறிதொரு
கணத்தில் ஒரு வார்த்தையாக
வெளிப்பட்டு விடுகிறது.
                         *

தவிப்புகளற்ற மௌனம் 
கடலலைகள் அரித்து செல்லும்
மணற்துகளின் ஏதோ ஒரு துளியாகிறது.

                        *



"முகமூடியணிந்து இடும்
சிரிப்புக்குறீயீடை விட
குரூரம் கசியும் வார்த்தைகளும்
பதிலுரைக்காத அவமதிப்புக்களும்
பேசாத மௌனங்களும்
போதுமானதாய் இருக்கிறது எனக்கு.."


யாரும் புகுந்திட முடியா
வெறுமையை சட்டென நிரப்பி விடுகிறது
ஏதோ ஒரு கவிதை..


முதல் துளி வீழ்ந்த கணம்
மண்வாசனையை பற்றிவந்ததாய் ஞாபகம்
விலக்கப்படாத ஒரு நினைவு
உள்ளுக்கும் வெளிக்குமாய்
கடந்து செல்கின்றது.

இழுத்துப்பிடித்த சுவாசங்களும்
உடல் நிறைத்த மழைத்துளிகளுமாய்
நீட்டித்துக்கொண்டிருக்கிறேன் உனக்கான
என் வாழ்வை.

இருந்தும்
தொடுதலற்ற உன்னுடனான பொழுதுகள்
ஏகாந்தத்தை நீட்டித்தது போல் இந்த
மழை இல்லவே இல்லை.

Saturday 8 September 2012


இரவல் ஒளியில் தனித்திருந்த நிலவின்
கண்ணீர் போல் ஒற்றைத்துளிகளாய்
கரங்களில் இறங்கியது அந்த மழை.

முன்னெப்போதோ நுகர்ந்திருந்த மண்வாசனையும்
மகரந்தத்தின் ரகசிய மொழிகளை
களவாடி களித்திருந்த வண்டின் ஓசையும்
சேர்ந்து வந்ததைப்போன்ற ஒரு பிரமையும்
அக்கணத்தில் தோன்றி முகிழ்த்தலானது.

எங்கும் ருசித்திராத , ருசியே இல்லாத ஒரு
ருசியாய் இந்த மழை இன்றும் நாவில்
உருண்டோடியிறங்கியது .

மென் மழைத்துளிகளாய் இறங்கிக்கொண்டிருந்து
பெரும் மழையாய் வீழத்தொடங்கிய அக்கணம்
அற்றை நாளின் வெப்பத்துணுக்குகள்
மெல்ல மழையின் சரீரத்திற்கு இரையாகத்தொடங்கின.

தழலென்றிருந்த தேகம் தணிந்து தளரத்தொடங்க
என்னிருப்புக்கள கரையத்தொடங்கின
முழுதுமாய் மழைத்துளிகளாய் நிலத்தில்
வீழ்ந்து தெறித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்

சிதறல் துளிகளாலான என்னை நானே
ஒன்று சேர்க்க முயன்று தோல்வியுறுகிறேன்
உணர்வுகள் முகிழ்க்கும் ஏகாந்தத்தின் முன்
போதித்தத்துவம் பெற்று மகிழ்கிறேன்.

எப்பொழுதும் கிடைத்துவிடாத இந்த மகிழ்வின்
கணம் என்றாவது சிறகுடைந்த பறவையாய்
மழைக்கு முன்னான கணத்தினை
நோக்கி என்னை செலுத்திவிடக்கூடும்.

அப்பொழுதும் இந்த மழை வலுவிழந்து
காய்ந்து போகாதிருக்கட்டும்.


உனக்கென்று ஒரு கணம்

ஒரு கணத்தின் மகத்தான
வரத்தினை உனக்கு
அளித்திடக் காத்திருக்கிறேன்
நெடு நாளாய் நீ காத்திருந்த
நொடி இதுவாகத்தான் இருக்க கூடுமென
தெரிந்திருந்தும் பொத்தி வைத்திருந்ததற்காய்
நீ கோபித்து கொள்ளவும் கூடும்
இக்கணத்தினை உனக்கு பரிசாய்
அளித்திட்டால் பல கணங்களாய்
அமிழ்த்தியிருந்த உன் வேட்கைகள்
ஒருசேர என்னை தாக்கவும் கூடும்
தொடர் தகிப்புக்களை
என்னால் தாங்கவியலாது என
மிக மென்மையான காதல்களை
எனக்கு நீ பரிசளிக்கவும் கூடும்
விருப்பு வெறுப்பற்ற
தோழனாயும் நீ என் எதிர்ப்பார்ப்புக்களை
கேலிப்பேசி விடவும் கூடும்
கருணையற்ற மழையைப்போல்
நீ ஒரேயடியாய் என்னை
முகிழ்த்துவிடவும் கூடும்
இவையெல்லாவற்றையும்
நான் தாங்கிவிடவும் கூடும்
இல்லையென்றால்
உன்னிடமிருந்து கூட எனக்கான
அழைப்பு வரக் கூடும்
காலம் மட்டுமே அறிந்த நிகழ்வுக்காய்
உன் திசை நோக்கி நகர்த்துகிறேன்
என் மொத்த பிரியத்தையும்.

அதீதத்தில் வெளியான கவிதை..

Saturday 25 August 2012


Tuesday 24 July 2012



யாருமேயில்லாத இரவுக்குள்

பெரும்பாலும் என்னைத்தொலைத்து

விடுவதே வாடிக்கையாயிற்று என் கனவுகளுக்கு.



மீசையை நீட்டிக்கொண்டு

நாவால் உதடுவருடிக்கொண்டிருக்கும் பூனையோ

கிளைமீது தனித்திருந்து நதி நீரில்

நெளிந்து செல்லும் மீனைக்கவ்விப்பறக்கும்

மீன்கொத்தியோ,



நெடுமலையின் உச்சியிலிருந்து

தலைக்கீழாய் விழுந்துவிடவோ,

இருட்டறையில் பாம்படம்

அணிந்த பாட்டிகளின் அருகில்

மணப்பெண்ணாகவோ,



அறைமுழுதும் சிதறிக்கிடக்கும்

சந்தனத்திலும், பூக்களிலும்

பிரண்டுசெல்வதாகவோ,

இறந்துப்போன அம்மாவின்

சேலைப்பற்றி கதைசொல்வதாகவோ

பழுத்தோலைகளின் நடுவே மணல்கீறும்

சிறுமியாகவோ



ஒரு கனவும் வருவதேயில்லை

கனவுகளில் தொலைபவருக்கு

கனவுகள் வராமல்தான் இருக்குமோ.


ஒற்றை நிலை



புறந்தள்ளலின் ஒவ்வொரு

முடிவும் உன் ஸ்பரிசங்களில்

சமனப்படுத்திக்கொண்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



நமக்கான மாற்றங்கள்

ஒவ்வொரு ஊடலிலும் மிகமிகப்

பெரிதாய் மறைக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



பிணைக்கப்பட்டதற்காய்

பிணைந்திருந்து, சங்கிலி

அறுபடக்காத்திருந்து பிரிந்ததாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



ஒவ்வொரு வார்த்தையின் இறுதியும்

முடிக்கப்படாமல் கடந்ததிலேயே

ஏதோ ஒன்று உன்னிடமிருந்து முடிக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.





வெற்றிடக்குமிழினுள் அடைப்பட்டிருந்த

காற்றாகவே நீ இருந்ததாய்

எனக்கு காண்பித்து சென்றாய் என்பதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



எனவே தான் உன் ஒதுக்கத்தின் முன்

ஒதுங்குதலுமாய்,புறக்கணிப்புக்குமுன்

புறக்கணித்தலுமாய் முன்னேறிக்கொண்டு

விரைந்து விடுகிறேன்.



சமனற்ற நிலையாகவே

தோன்றவில்லை நீ ஒதுக்கி சென்றபோதும்,

உன் தீர்க்க முடியா காதல்

தீர்ந்த புள்ளியாகவே என் ஒற்றை நிலை.



மலைகள் இதழில் வெளியாகிய கவிதை

Friday 15 June 2012



அதீதத்தில்......






இறுக்கி கோர்த்துக்கொள்ளும்
கரங்களுக்கிடையில்
நேசங்களை புதைத்து
வைத்துக்கொள்கிறாய்

முன்னெப்போதும்
அறிமுகமில்லா வார்த்தைகளின்
குளிர்வை அனுபவிக்க
கொடுக்கிறாய்


அறையின் வெதுப்பில்
சிற்சில முரண்கள்
வெந்து தணிகின்றன

இடமாற்றம் செய்யப்படும்
காதல்கள் ஒலிகளின்
மயக்கத்திற்காய் காத்திருக்கையில்

விலகிவிடுதலுக்கான
பிரயத்தனங்களாய்
மௌனங்களை
மென்று கொண்டிருக்கிறேன்

என்றோ எப்பொழுதோ
நடந்த பாதையின்
நீட்டலில் நடந்து செல்ல.

Saturday 9 June 2012

நவீன விருட்சத்தில் ....

 

சதுரங்கள் மடித்த
முக்கோணங்களாகவோ
வட்டங்களாகவோ
செவ்வகவமாகவோ தான்
எப்போதும் இருக்கின்றன
வீடுகள்


வெறுப்புக்களும்,
நிராசைகளும்,
சலிப்புக்களும்
புகைந்து வெளியேறிக்கொண்டே
இருக்கின்றன .

தங்கசங்கிலிக்குள்
புதைந்த சம்பிரதாயங்களின்
ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன


கடமைகள்,பொறுப்புக்கள்
வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன
அசல் பிரதிகளை போல

எப்போதாவது தான்

பசியாற வைக்கும்
உணர்வுகள் சங்கமிக்கும்
அன்பை மட்டுமே
போதிக்கும்
உள்ளாழ்ந்து பக்தி
செலுத்தும் இடமாக
இருக்கின்றன வீடுகள்.

நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

http://navinavirutcham.blogspot.in



சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல

எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல

புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்

ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..


Tuesday 5 June 2012


குறி இதழில் வெளியான இரு கவிதைகள்:-

சொல்லத்துணியாத
வார்த்தைகளின் சேகரிப்புக்கள்
மௌனங்களாக உன்னிடம்
வந்து சேர்ந்தும்
ஒலிகளின் மயக்கத்திற்காய்
காத்திருக்கிறாய்.

வார்த்தைகள்
சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்..


ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
இருந்தும் வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.

Monday 28 May 2012




"
போலி கௌரவம் குறித்து சீனிவாசன் இருமுனைத்தாக்குதல்களுக்கும் சளைக்காமல் பதிலளித்த போதும், அவரை உங்களுக்கென நான் ஒரு வெளி தருகிறேன், உங்கள் முகமூடியிலிருந்து வெளிவாருங்கள் என தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்த கோபி நாத்தின் மற்றொரு முகம் ஆச்சர்யத்தையே தந்தது.. சீனிவாசனை நமக்கு பிடிக்காமல் போனால் அவரின் படங்களை பார்ப்பதை தவிர்க்கபோகிறோம், நமக்கு அதனால் எந்த வித லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.. 

விஜயின் ஆரம்ப கால படங்கள் உண்மையில் எத்தனை பேருக்கு பிடித்து இருக்கும்? இன்று அவருக்கு இருக்கும் ஒரு இமேஜ் போலியான கௌரவம் தானே.. அவருக்கு மட்டுமல்ல அரசியல் வாதிகளிலிருந்து , பணம் இருக்கும் அனைவரும் போலி கௌரவத்தின் அடையாளத்தில் தான் வாழ்கிறார்கள்.. 

கோபிநாத்தே சீனிவாசனுக்கு இன்னொரு முகமூடி தர அத்தனை பிரயத்தனப்பட்டது நன்றாகவே இல்லை. மேலும் ஒரு தனிப்பட்ட மனிதரை அத்தனை பேர் முன்னிலையிலும் இத்தனை கேள்விகளை கேட்டதும், அதற்கு பொருத்தமான ஏளன சிரிப்புக்களை சரியாக எடிட் செய்து அந்த இடத்தில் காட்டியதும் அந்த நிகழ்ச்சி மீதான் மரியாதையை குறைத்தது.

பிரபலமாக ஒருத்தர் தன் காசை செலவழித்து சிலருக்கு நன்மை செய்கிறார், அதில் அவருக்குத்தான் லாபமும், நட்டமும் ஏற்பட போகுதே தவிர நமக்கு அவரை கிண்டல் செய்து பொழுது போக்குவது மட்டும் தான் மிச்சம்.

எல்லாருமே குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்ற வார்த்தையை வாழ் நாளில் ஒரு முறையாவது சொல்லியிருப்போம். ஆனால் அப்பொழுது எல்லாரையும் போலி கௌரவத்திற்காக தான் நீங்கள் இந்த வார்த்தையை சொல்கிறீர்கள் என சொல்ல முடியுமா?? அதை வந்திருந்த எழுத்தாளரும் முழுமையாக ஆட்சேபித்தார்.

 இதையே கமல், ரஜினி, விஜய் நற்பணி மன்றங்கள் சேவை செய்கையிலோ இந்த நீயா நானாவில் ஒரு முறையாவது அதை எதிர்த்து இருக்கிறார்களா? சூர்யா ஒரு நடிகராக தன்னை முன்னிருத்தி ஆரம்பித்த அகரம் அறக்கட்டளைக்கு அவ்வளவு விளம்பரம் கொடுத்த விஜய் தொலைக்காட்சி, நீங்கள் சாதாரண மனிதராக இருந்து தான் இச்செயலை செய்ய வேண்டும், ஒரு நடிகராக போலி கௌரவத்திற்காக இதை செய்ய கூடாது என சொல்லவில்லையே.. தான் பிரபலமாகிய பின் சேவைகள் செய்தால் அது உடனே மக்களுக்கு சென்று சேரும் என சீனிவாசன் சொல்லியிருக்கிறார், அவருக்கு சந்தர்ப்பம் தான் தந்து பார்க்கலாமே.. அப்படி செய்ய வில்லையெனில் பின் இவர்கள் கேள்வி கேட்கட்டும், ஒரு தனி மனிதன் ஒரு அடியை முன் வைக்கும் முன்னே அவரை இப்படி அசிங்கப்படுத்தியது ஊருக்கு இளைத்தவனை கோமாளியாக்கி பார்த்த கதையாகத்தான் தோன்றியது.."

Friday 25 May 2012



வாழ்க்கையின் மற்றொரு விளிம்பு எவ்வளவு துயரங்கள் நிறைந்தது என அன்று அறிய முடிந்தது. ஒரு பெண் தாய்மையடைகிறாள், அந்த கரு பெண்ணென அறியப்படுகிறது, அந்த கருவினை சுமந்த கருப்பை அலம்பப்படுகிறது, அப்பெண்ணுக்கு தெரியாமலே.. ஒரு முறை இருமுறை அல்ல, தொடர்ச்சியாக 6 வருடத்தில் 8 முறை. பெண் குழந்தையை பெற்று எடுத்ததால் அந்த பெண் வீட்டைவிட்டு துரத்தப்படுகிறாள்,அவள் குழந்தையையும் போராடித்தான் சட்டப்படி மீட்கிறாள்.

மற்றொரு பெண், பெண் மகவை பெற்றெடுத்ததால் முகம் முழுதும் அவள் கணவனால் கடிக்கப்பட்டு கோரமாக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். தமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் தான் இத்தகைய வன்முறைகள் நிகழ்கிறது எனப் பார்த்தால் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் மறைமுகமாக நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

கோடிக்கணக்கான நீர்த்திவலைகளில் ஒற்றைத்துளி முத்தென சிப்பிக்குள் உருவெடுத்தால்,அதனை கொண்டாடி மகிழ்வோம் நாம். இப்படி சிதைத்து பார்க்கும் மன நிலை சிலருக்கு வாய்த்து விடுகிறது.. பொதுவாகவே வரதட்சினைக்காகவும், சொத்துக்கள் வெளியில் சென்று விடக்கூடாதென்ற காரணத்துக்காகவும் தான் இது போன்ற பெண் சிசு கொலைகள் நடக்கிறது, ஆனால் இதில் தன் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்க தெரியாத பெண்களும் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்.எழுத்தாளர் சுஜாதா சொன்னதைப்போல் இன்னமும் நம் பெண்களின் நிலை கணவன் வாங்கி கொடுப்பதை சமைப்பதையும், அவன் வருமானத்திற்குள் குடுமபம் நடத்துவதோடு அவனின் கருவினை சுமக்கவும், முழுதாக பெற்றெடுக்கவும், இல்லை பாதியில் கருக்கலைப்பு செய்வதையும் தங்கள் கடமையாக கொள்கின்றனர். நாமும் நமக்கு நடக்கும் வரை இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு நம் பொழுது போக்குகளில் மூழ்கி விடுகிறோம்.பல மேல் தட்டு மக்களிடமும் கவுரவ கொலையாக சிசுக்கொலை செய்யப்படுகிறது. இதனை ஆணித்தரமாக முன் வைத்து சத்யமேவ ஜயதே நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.. ஆனால் இந்த நிகழ்ச்சியையும் ஏதோ டாக்குமெண்டரி திரைப்படம் போல் நம் மக்கள் நினைத்து சேனல் மாற்றுவது தான் எங்கெங்கிலும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது..


இந்த நிகழ்ச்சி பற்றி என் தோழி கங்கா எழுதியுள்ள பதிவை இங்கு கொடுப்பதில் பெருமிதப்படுகிறேன். இனி ஒரு விதி செய்ய முற்படுவோமா???


எல்லோரையும் மயக்கும் குளிர்ச்சியான பின் மாலை மாலைப்பொழுது அது, இனிமைகளை குத்தகை எடுத்த அழகான, மிதமான பொழுதும் கூட.. துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு பயணித்துக்கொண்டிருந்தேன்.

என்னுடன் பயணித்தவர்கள் அந்த கால நிலையையும், அதன் அழகையும் தங்கள் கண்களில் பருகி, உதடுகளில் புன்னகையாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஏனோ என் மனம் அதில் லயிக்காமல், ஒரு வித பயம், பதட்டம், சந்தோஷம் என உணர்ச்சிகளின் கலவையாக குழம்பிக்கொண்டிருந்தது. ஏனென்றால் என் சகோதரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அன்று அதிகாலையில் அனுமதிக்கபட்டிருந்தாள். பத்து மாத காத்திருப்பின் பலனாக தேவதையவள் சுக பிரசவத்தில் வீடு வந்தாள். நாங்கள் மொத்தம் பன்னிரண்டு பேத்திகள் எங்கள் குடும்பத்தில், ஒவ்வொருவரையும் தேவதையாகவே கொண்டாடினார்கள் எங்கள் வீட்டில். ஆனாலும் ஒரு மூலையில் சமூகத்திற்காக, பெரியவர்களின் திருப்த்திக்காக சித்தி, அத்தைகள் எப்போதாவது ஆண் வாரிசிற்காக வேண்டிக் கொண்டுதானிருந்தார்கள்.

என் அக்காவின் குட்டி தேவதைக்கு எங்கள் வீட்டிலிருந்த வரவேற்ப்பு அவளின் வீட்டிலில்லை, அத்தை (அக்காவின் மாமியார்) இவர்கள் வீடு நுழையும் போதே தலையில் அடித்து கொண்டார்களாம். அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் வரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அக்கா வார்த்தைகளால் குத்தப்பட்டு கொண்டுதானிருந்தாள். திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இவர்களின் குழந்தை நச்சரிப்பு ஆரம்பித்து விடுகிறது, அப்படியும் ஒரு குழந்தை பிறந்தால் ஆணாக தான் பிறக்க வேண்டும் பலருக்கு, இல்லையேல் அதின் பின் விளைவுகளை தாயும், அச்சிறு பெண் குழந்தையுமே சந்திக்க நேரும். எத்தனை கொடுமை இல்லையா???

இந்நேரம் நீங்கள் நான் எழுதபோகும் விஷயத்தை ஊகித்திருந்தால் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியில் அமீர் கானின் சத்யமேவ ஜெயதேவை காண நேரிட்டது. இன்று நம்மில் பலர் குறைந்து விட்டதாக நினைக்கும் பெண் சிசு கொலை இன்னும் நடைமுறையில் இருந்து கொண்டுதானிருக்கிறது. அதுவும் படித்த, மேல் தட்டு மக்களிடமும் இம்மனநிலைமை அதிகமாக காணப்படுவது தன் உட்ச்சகட்ட வேதனை.

பெண்களை தெய்வங்களாக மதிக்கும் பாரத நாட்டை, பாரத மாதா எனவே விளிக்கிறோம். துர்கா, மீனாட்சி, கருமாரி, பண்ணாரி, சீதா தேவி என பல பெயரிட்டு வணங்குகின்றோம்.ஆனால் குலம் செழிக்க ஆணே வேண்டும். ஆண் இறுதி காரியத்தை செய்தால் மட்டுமே முக்தி கிட்டுமாம்.

நிகழ்ச்சியில் உதரணமாக காட்டியவர்களில் படித்தவர்களே அதிகம். அதுவும் ஒரு மருத்துவர் பெண் குழந்தைகளை (இரட்டையர்) பிரசவித்ததற்காக கொடுமைபடுத்தபட்டிருக்கிறார். அவரின் கணவரும் மருத்துவரே, மாமியார் பல்கலைகழகத்தில் பணி புரிபவர். எனக்கு எப்போதும் ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் இவர்கள் எல்லாம் எப்படி மாணவர்களுக்கு வாழ்க்கையை கற்பிப்பார்கள். ஒரு மாதம் கூட ஆகாத அச்சிறுகுழந்தையை இரண்டாவது மாடிப்படியில் இருந்து எட்டி உதைத்திருக்கிறார். உயிர் தப்பியது அக்குழந்தையின் தாய் செய்த புண்ணியமே. அந்த மாமியாருக்கும் இரண்டு பெண்கள் உண்டு.

அடுத்த பெண் குழந்தையின் தாய்க்கு பலமுறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் அவரின் அனுமதி இல்லாமலேயே செய்யபட்டிருக்கிறது. காரணம் வயிற்றில் உள்ள சிசு பெண் என்பதால்.
இவை எல்லாவற்றையும் விட உச்சகட்ட அதிர்ச்சி உண்டானது, கணவரால் முகம் கடித்து கொடூரமாக்கபட்ட பெண்ணை கண்டபோது தான். அவரின் முகம் நமக்கு கண்ணீரை வரவழைக்கும். அவரின் முகத்தை கடித்தே உருகுலைத்திருக்கிறார், எத்தனை கொடுமை??


முதலில் பேசிய பெண் கூறியது என்னவென்றால் இவை எல்லாவற்றிக்கும் காரணகர்த்தாக்கள் மருத்துவர்களே. இது வரை ஒரு மருத்துவர் கூட பெண் சிசு கருகலைப்புக்காக சிறை செல்லவில்லை, உரிமையும்(லைசென்ஸ்) ரத்து செய்ய படவில்லை. ஆனால் இது வரை மூன்று கோடி பெண் சிசு கொலைகள் நடந்திருக்கிறது. பத்திரிக்கையாளர் இருவர் கேமரா உடன் சென்ற போதும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாது ஐந்து மாத கருவை கலைத்து விடலாம் என கூறுகிறார்கள் மருத்துவர்கள். அவ்வாறு வீடியோ எடுத்த பின்னும் சட்டம் அவர்களை எதுவும் செய்யவில்லை.


நீதிபதி, தீர்ப்பு எழுதி, தண்டனை கொடுக்க வேண்டியவரே ஆண் குழந்தை தான் குலதீபம். இதற்காக ஏன் இவர்களை(கொடுமைபடுத்தப்பட்ட பெண்ணின் மாமியார், கணவர், மற்றும் குடும்பம்) கைது செய்து கொண்டுவந்தீர்கள் என வக்கீலிடம் கேட்டுள்ளார். இந்த கொடுமையை எங்கு பொய் சொல்வது???


ஆய்வுகளின் படி இதில் அனைவரும் அடக்கம், மருத்துவர், ஐ.ஏ.எஸ் ஆபீசர், ஹெல்த் டிபார்ட்மென்ட் உட்பட. ஒரு பக்கம் ஹரியானாவில் 35 வயதான ஆண்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். ராஜஸ்தானில் பெண்கள் பிற மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு பொருளாகவே கருதபடுகிறார்கள். உபயோகிக்க மட்டுமே, மதிப்பு மரியாதை எதையும் எதிர்பார்க்க முடியாது.

விரைவில் இந்நிலைமை பல மாநிலங்களில் பரவக்கூடும், நம் தொட்டில் குழந்தை திட்டம் நமக்கு சிறுதளவு உதவ கூடும். இதனால் நம் மரியாதை கூடும் என தோழி ஒருவர் கூறினார். ஆனால் உண்மை அது அல்ல. கொடூரமான உண்மை என்னவெனில், பெண்கள் இனி பொருளாக விற்கப்படலாம். ஒரு பெண்ணை இரு ஆண்கள் மணக்க நேரிடலாம் . இதற்க்காகவே ஒரு கும்பல் கிளம்பி பெண்களை கடத்தி விற்க நேரிடலாம். இவை எல்லாம் நடக்க கூடியவை மட்டுமே.


இதை தடுக்ககூடிய மந்திரகோல் நம்மிடம், நம் ஒவ்வொருவரிடமும் தான் உள்ளது. இவ்வாறான நிகழ்ச்சிகளை காணும் போதும், கேட்கும் போதும், படிக்கும் போதும் உணர்ச்சிவசபடுவதோடு மட்டும் அல்லாது நடைமுறையில் செயல் படுத்த வேண்டும். உங்கள் கண்முன் எங்கேனும் பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்தால், முடிந்த வரை எடுத்து கூறி தடுத்து நிறுத்துங்கள். அப்படியும் முடியாவிட்டால் போலீஸ் உதவியை நாடலாம். எதேனும் மருத்துவர் இக்காரியங்களை செய்கிறார் என்றால் தயங்காமல் அவர்மேல் கம்ப்ளைன்ட் செய்யுங்கள். அப்படி உங்களின் சூழ்நிலை செய்யவிடாமல் தடுத்தாலும் உங்களுக்கு தெரிந்த துணிச்சலான உறவினரோ, தோழியிடமோ கூறி தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுங்கள். போதும்..இது போதும் இனியும் நம் சகோதரிகள் கொல்லப்படக்கூடாது, நம் தாய்மார்கள் கண்ணீரிலும் குற்ற உணர்ச்சியிலும் தவிக்க கூடாது. பெண்ணால் முடியாதது ஏதும் இல்லை பெண்ணே. வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்.

- Ganga

Wednesday 2 May 2012


சொல்லத்துணியாத
வார்த்தைகளின் சேகரிப்புக்கள்
மௌனங்களாக உன்னிடம்
வந்து சேர்ந்தும்
ஒலிகளின் மயக்கத்திற்காய்
காத்திருக்கிறாய்.

Saturday 14 April 2012



திண்ணையில் வெளிவந்துள்ள என் கவிதை


வார்த்தைகள்



சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்.


ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.


Saturday 24 March 2012

விதைக்குள் விருட்சம்


கல்லெறியும் விசையில்
கலைந்துவிடும் குளத்தின்
தெளிவு போல்
சிதறிப்போகிறேன்
உன் வார்த்தைப்பிரயோகங்களின்
முன்..

கூழாங்கற்கள் சேகரிக்கும்
சிறுமியின் பொறுமையில்
நீ சிதறவிட்ட
ஒவ்வொரு தருணங்களையும்
சேகரித்து வைத்துக்கொள்கிறேன்
காலத்தின் இடைவெளிகளில்..

மகரந்தகளோடு ரகசியம்
பரிமாறிக்கொள்ளும் தேன்சிட்டின்
மொழிகளை உன்
விரல்களுக்கு கற்பிக்கிறேன்

நிலம் கீறி
மேலெழும் சிறுவிதை
ஒளித்திருக்கும் விருட்சம்போல்
உன் மௌனங்கள் தேக்கிவைத்திருக்கும்
பெருங்காதலை
வெளியிட…
http://www.atheetham.com/atheetham/?p=176




நம்முடன் ஒத்துப்போகும் ரசனைகளை வைத்து மதிப்பிடப்படும் ஒருவர் உண்மையில் ரசனை இல்லாதவராக இருக்க முடியாது. இரவு வான் ஒருவருக்கு நட்சத்திரங்களை ரசிக்க தரலாம், மற்றொருவருக்கு நிலவற்ற இருளை ரசிக்க தரலாம், அதற்காக அவர் ரசனையற்றவர் என ஒதுக்க முடியாது. பொதுவாக ஒரு பிரபலத்திற்கோ அல்லது நாம் பெரிதும் மதிக்கும் ஒருவருக்கு பிடித்த ரசனைகளே நமக்கும் ரசித்து பார்க்கலாம் என தோன்றுகிறது, அதிசயமாய் நாம் ரசிக்கும் ஒரு சிறு விஷயத்தை வெளி சொல்வதற்கு கூட நாம் தயங்குகிறோம் என்பதே உண்மை.பலர் சொல்லும் ரசிப்புக்களையே நாமும் நமக்கானது என்று நினைத்துக்கொண்டு உங்கள் கூட்டத்தில் நானுமிருக்கிறேன் என்று மட்டுமே சொல்ல ஆசைப்படுகிறோம். வெளிசொல்லாதவரை அந்த வட்டத்தில் இருந்து தள்ளிவைக்கவே விரும்புகிறோம். ஒவ்வொருவரும் எத்தனை வேலைகளுக்குமிடையிலும் ஏதேனும் ஒரு விஷயத்தை கண்டிப்பாக ரசித்திருப்பார்கள், ஆனால் அந்த கணமே மறந்துமிருப்பார்கள்.ரசனைகளை மனதில் வைத்து அந்த கணத்தை மீண்டும் மீண்டும் ரசிப்பவன் கவிஞனாகிறான்.மற்றவன் ரசிகனாகிறான். ரசனைகள் மாறினாலும் ரசிப்பவர் இருக்கும்வரை உலகிலுள்ள அனைத்தும் அழகுதான்.அனைத்தும் ரசனைகள் தான்..

Monday 12 March 2012

நவீன விருட்சத்தில் வெளியாகியுள்ள என் கவிதைகள்

பெயரிழந்த பறவை




பெயர் கொத்திப்பறந்த ஏதோ ஒன்று
மரத்தின் உச்சியில்
அமர்ந்து உற்று
நோக்கிக்கொண்டிருக்கிறது
என்னை..


தேகமெங்கிலும் அந்நிய வாசனையோடு
சுயத்தை இழந்துக்கொண்டு
நான்..

உயிர் திருகும் வலியில் என்
உணர்வுகளை கடத்திக்கொள்கிறது
அதனுள்..

பெயரிழந்த பறவையாகிறேன் நான்
குற்றத்தின் சுமையும் என்
சிறகின் மேல்..



******************************************


சிதறல் துளி


உறங்கியும் உறங்காமலும்
இருக்கின்ற விடியலை
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கின்றன
உன் நினைவுகள்.

என் கனவு, நினைவு,
எல்லாமாகிப்போகின்றன
உன் விரலிருந்து கசிந்த
வார்த்தைகள்..

சுவாசமாய் உட்செல்லும்
காற்று தீர்மானமாய்
சொல்லும் உன் வார்த்தைகளின்
வெப்பத்தை..

உடலெங்கும் வழிந்தோடும்
குருதி மட்டுமே உணரும்
பிரியம் மேலிடுகிற
உன் ஒவ்வொரு ஸ்பரிசத்தின்
குளிர்ச்சியையும்.


உன் அளவிடமுடியா
பிரியத்தின் முன்
சிதறல் துளியாகிறேன்
நான்.


**********************************************



யுகங்களின் தேவதைகளுக்கான
இலக்கணம் கண்ணீராலும், துன்பத்தாலும்
மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.


தேவதையென்றாலும், தாடகையென்றாலும்
பெண் பெண்ணாய்த்தானிருக்கிறாள்.


Wednesday 7 March 2012

யுகங்களின் தேவதைகளுக்கான
இலக்கணம் கண்ணீராலும்,
துன்பத்தினாலும்
மட்டுமே வரையறுக்கப்படுகின்றன.

தேவதையென்றாலும் தாடகையென்றாலும்
பெண் பெண்ணாய் தானிருக்கிறாள்..

Sunday 4 March 2012

திண்ணையில் வெளியாகியிருக்கும் என் கவிதையினை இன்று தான் பார்க்க நேர்ந்தது.. தொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது ..




உச்சி வெயிலில்
வெற்றுடம்புடன்
மருள் பார்வையில்
மயங்கி புடவையின்
நுனி பற்றி இழுத்தும்
கவனம் கார் கண்ணாடியிலும்
சிக்னல் விளக்கிலும் …
கைசேர்த்த காசுகள்
ஒரு பாலாடை பாலுடன்
சிறிது மதுவும் ஊற்றி
மயக்கத்தை உறுதிபடுத்தி
வாகன ஊர்வலத்தில்
இடைசெருகி
மாலை நேர
கணக்கு முடித்து
கமிஷன் வாங்கி
சேயை அதன் தாயிடம்
சேர்க்கையில் கண்ணில்
நிழலாடியது தன்னை
விற்றுப்போன
தாயின் முகம் …..
- இக்கவிதை கவிப்ரியா பானு என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.. ஆகஸ்ட் மாத இதழில்.. 

Saturday 3 March 2012

அதீதம் இதழில் இரண்டு கவிதைகள் வெளியானதில் மகிழ்ந்துக்கொண்டிருக்கிறேன் நான்.. சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்த பின் கிடைத்த அங்கீகாரம்..தேனம்மை அக்காவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.. முகப்புத்தகத்தில் அவ்வப்போது பதியும் கவிதைகளை தாண்டி அடிக்கடி எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது இந்த அங்கீகாரம்.

http://atheetham.com/story/kavibhanu

இந்த இணைப்பில் கவிதைகளை காணலாம்.. 

Monday 27 February 2012

மின்வெட்டு

பண்பலையில் ராஜாவின் பாடல்கள்
நட்சத்திரப்புள்ளிகளில் இணைக்கும் ஓவியங்கள்
தலைக்கோதி மகனுக்கு கதைசொல்லல்
மொட்டைமாடி மென் நடை
கணினி அரட்டையில் மூழ்கிப்போகாத இரவு
புத்தக வாசனை நிறைந்த உறக்கம்
அலாரம் வைக்காமலே அதிகாலை விழிப்பு
மீட்டெடுத்த ரசனைகள்
அனைத்தும் காணாமல் போகின்றன
காலை அவசரத்தில் ஓடாத மிக்ஸியும்..
தண்ணீர் வராத குழாயும்..வேலை செய்யாத லிப்ட்டும்..
ஒரே நேரத்தில் நன்றி நவிலலும்,
வசைப்பொழிதலும் மின்வெட்டிற்கு..



Friday 24 February 2012


சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் வழியெங்கிலும் மரங்கள் கவிந்து இயற்கை அளித்த நிழற்குடையாய் சில்லென்று இருக்கும்.அடி மரத்தினைப்பார்க்கையில் பழமையான மரங்கள் என தோன்றும்.. (சிறு வயதில் மரங்களின் வயதைப்பற்றி தெரியாததால் மரம் பெரியதாக இருந்தால் அது வயதான மரம் என்பது என் அனுமானம்.).செங்கல்பட்டு தாண்டும் வரை என்று நினைக்கிறேன். பசுமைக்கு குறைவில்லாமல் அந்த சாலை முழுதும் வயல்களும், மரங்களும் நிறைந்திருக்கும். நகர வாழ்க்கையினை விரும்பி புலம்பெயர ஆரம்பித்த மக்கள் வசதிக்காய் சாலையை அகலப்படுத்த வேண்டி அந்த மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு இப்போது தகிக்கும் வெயில்தான் அந்த சாலையெங்கிலும்.. சமீபமாக திருச்சி - ராமேஸ்வரம் செல்கையிலும், முசிறி செல்லும் வழியிலும் பல ஆண்டுகளாய் இருந்த மரங்கள் அடியோடு சாய்க்கப்பட்டிருந்தன.. அதற்கு பிரதிபலனாய் எங்குமே சிறு செடிகள் கூட நடப்படவில்லை.. ஒரு சகோதரனிடம் நான் இது பற்றி அங்கலாய்க்கையில், மக்களின் சொகுசான வாழ்க்கைக்கான பலியிடுதல் இது, இதற்கு மீண்டும் மரங்கள் நட்டால் தீர்வாகாது என்று கூறினார்.. இங்கு சில நாட்களுக்கு முன்னரும் ஒர் நிலைத்தகவல் பதிந்திருந்தனர், மீண்டும் மரங்கள் நட்டால் ஏற்கனவே நட்ட மரங்களை வெட்டியதற்கு சமமாகி விடுமா என்று. இதே போல் நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் நாம் சிறு வயதில் அனுபவித்த அந்த இயற்கை சூழல் நமக்கு கிடைத்திருக்குமா என்று தோன்றியது, அதே சமயம் சகோதரர் சொல்லியதும் சரிதான், இப்போது நாம் நடப்போகும் மரங்கள் நாளை நம் பிள்ளைகளின் வசதிக்காக அழிக்கப்படுமென்று.. விடை சொல்பவர் யார்.... இல்லை மாத்தாய் போல் கடமையை செய்து கேள்வியில்லாமல் சென்று விடலாமா??


Tuesday 21 February 2012

வாய் வழி அமிர்தமாய்
இறங்கி உடலெங்கும்
வழிந்தோடும் என் இனிய மதுரமே..




மதுரம் போன்ற என் தோழி கங்காவின் பதிவு இது.. அவளின் முதன் முயற்சி இது.. சகோதரிகளாக பிறந்திருக்க வேண்டிய நாங்கள் தோழிகளாகியிருக்கிறோம்.. என்னுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் ஆழமான , உண்மையான விமர்சனம் தந்து, சோம்பித்திரியும் என்னை செல்லமாக தட்டி(திட்டி) எழுத வைக்கும் மதுரத்தோழி அவள்.. இலக்கிய நடையில் இருக்கும் என் எழுத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கேலியும் கிண்டலுமான அவளின் எழுத்து நடை எனக்கு சில சமயங்களில் பொறாமையை தரும்.. அவளின் கன்னி முயற்சினை இங்கு பதிவிடுவதில் எனக்கு பெருமை..

குறுங்கட்டுரை .. வாழ்வில் ரசித்த பல நிமிடங்களை ரசிக்கும்படி தரும் அவளின் இந்த பதிவு எனக்கு மிகப்பிடிக்கும்.. குறைகள் சொல்ல வேண்டுமென்றால் சொல்வர் சிலர், ஆனால் குறைகளையும் நிறைகளாக பார்ப்பது தானே நட்பு..

இதோ அவள் பதிவு...


மழை நாளும் என் மனதிற்கினிய .......




அது ஒரு அந்திசாயும் பின்மாலை நேரம்.. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

நம்மூரின் மண்வாசனை,உடலையும் மனதையும் வருடி செல்லும் குளிர்ந்த காற்று,மரங்கள் தங்களுக்குள் சல சல என பேசிக்கொள்ளும் இனிய ஓசை, கூடு சேர விரைந்து செல்லும் பறவைகளின் இனிய நாதம்..

மழையின் வருகையை கட்டியம் கூறும் இவைகள் அனைத்தும் சேர்ந்து அம்மாலை வேளையை மிகவும் ரசிக்கத்தக்கதாக மாற்றிக்கொண்டிருந்தது.


ஏதோ ஒரு நிகழ்வு, 
இனம் புரியா உணர்வு, 
என்றோ தொலைத்த 
ஒரு உறவின் நினைவு ..

இவை அனைத்தின் சாரல்களும்,தூறல்களும் ஒவ்வொரு மழை நாளின் போதும் மறவாமல் என் இதயம் நனைக்கிறது.

மிதந்து வரும் 
மேகங்களில் ஓளிந்திருக்கும்
தோழி..

பூமித்தாய்மடியின்
சுகம் தேடி ஓடி 
வருகிறாள்..

மிக சிறிய தூறலாக ஆரம்பித்தது மழை..

கிளர்ந்து எழுந்த அம்மண்வாசனையோ ஒரு கை அள்ளி சாப்பிட மாட்டோமா என்ற ஏக்கத்தை கூட்டியது..மிக வேகமாக எழுந்து பால்கனியில் போய் அமர்ந்தேன்..சிலு சிலு என வீசிய தென்றல் மனதை கொள்ளை கொண்டது..முகத்தில் விழுந்த சாரல் மெய் மறக்க செய்தது..

"கங்கா... கங்கா..ஹே ..காதுல விழுதா இல்லையா".. வேற யாரு எங்க அக்கா தான்..அதானே நம்ம ஒரு நிமிஷம் உட்கார்ந்தா கூட பொறுக்காதே!!
"என்னக்கா வேணும் ???" என கேட்டதும் , " ஒரு கப் காபி கொடேன் ப்ளீஸ் ..நீ போடுற காப்பியே ஒரு தனி டேஸ்ட் தான்.." ஹூம்...இந்த ஐஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...

அசைந்தாடி எழுந்து கிச்சனில் நுழைந்தேன்..அடுப்பில் பாலை ஏற்றியதும் ஒரு சலனம் நமக்கும் ஒரு கப் சேர்த்து போட்டுடலாமா?? எப்படி பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கப் வராது,கூட தான் வரும்..கைபாட்டில் வேலை பார்க்க மனம் ஒரு புறம் காபி வேண்டுமா?? வேண்டாமா?? என தர்க்கம் செய்து கொண்டிருந்தது..

இதை எல்லாம் மீறி,என்னை சுற்றி உள்ளவை மறந்து மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது..

அட அது காபி பத்தி தாங்க....(நீங்க பெருசா எதிர் பார்த்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல, ஆமா சொல்லிட்டேன்)

வாய் வழி அமிர்தமாய்
இறங்கி உடலெங்கும்
வழிந்தோடும் என் இனிய மதுரமே

எனக்கும் காபிக்குமான அறிமுகம் எனது பதினாலு வயதில் ஆரம்பித்தது.அப்போது நான் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருந்தேன்...எனது எட்டு வயதிலிருந்தே காபி எனக்கு பரிச்சயம் தான் ஆனால் ஹாஸ்டலில் கொடுக்கப்படும் அந்த அமிர்த பானத்தை பருக என்றுமே எனக்கு விருப்பம் இருந்ததில்லை...

"தண்ணி வேணும்னா பைப்பில் பிடிச்சு குடித்தா..அதுக்கு ஏன் டைனிங் ஹாலுக்கு போற..ஹோ சுடு தண்ணி வேணுமா சரிபோத்தா"..எங்கள் ஹாஸ்டல் காபி குறித்து தோழிகள் அடிக்கும் கமெண்ட் இதுதான்..அவர்களின் இந்த கம்மென்ட்க்கு பயந்தோ..இல்லை எங்கே அதை குடித்தால் நம் காலையும் வாரிவிடுவார்கள் என்ற எண்ணத்திலோ...அதை குடிக்கும் துணிவு எனக்கு வந்ததில்லை..

இதே போல் ஒரு மழைநாளில் தான் எனக்கு காபி அறிமுகம் ஆனது..இதே எனது அக்காவின் கைவண்ணத்தில் தான்...ஒரு விடுமுறையில் வீடு வந்த போது என் அக்கா சித்தியிடம் "தலைவலிக்குது ஒரு காபி கொடுங்க சித்தி" என்று கேட்டு வாங்கிய காப்பியும்..."செல்ல செல்லம்மா(அது தாங்க அவங்க பேரு) சித்தி தானே..ஒரே ஒரு கப் ஹார்லிக்ஸ் கொடுங்க சித்தின்னு", நான் கேட்டு(ஐஸ் வச்சு) வாங்கிய ஹார்லிக்சும் எங்களை அறியாமல்,மழை சுவாரசியத்தில் இடம் மாறியது...

முதல் ஒரு சிப்பிலேயே எனக்கு அதன் மணமும்,சுவையும் பிடித்து போயின..எனக்கும் என் அக்காவும் அன்றிலிருந்து ஒத்து போன ஒரே விஷயம் அது மட்டும் தான்...அதற்கு பின் நான் காபி பைத்தியம் ஆனதற்கான முழு பொறுப்பும் என் அக்காவையே சேரும்(நம் தவறுகளுக்கு அடுத்தவர்களை கைநீட்டுவதில் என்றுமே ஒரு தனி சுகம் தான்). 

ஸ்கூல் முடிக்கும் வரைக்கூட நான் அத்தனை காபி பைத்தியமாய் இருந்தது இல்லை..எல்லாம் ஹாஸ்டல் காபி தான் காரணம்..

ஆனால் என்றைக்கு இந்த காலேஜ் வாசலில் காலடி எடுத்து வைத்தேனோ,அன்றைக்கு ஆரம்பித்து எங்கள் கேண்டீனுக்கு ப்ராபிட்..காலையில் எழுந்ததும் அண்ணா காபி ப்ளீஸ்!! என கேண்டீன் போய் நிற்பேன்(காலேஜ் கூட ஹாஸ்டல் தாங்க அய்யோ பாவம்னு நீங்க சொல்லுறது கேட்குது )...ஸ்ரீதேவி காலங்கார்த்தால வந்துடுச்சு பாரு.... என அவர் மனதில் என்னை அர்ச்சனை பண்ணிக்கொண்டே..காபியை கண்முன் நீட்டுவார் (நிஜத்துல அவரு வேற சொல்லி திட்டி இருப்பாரு ஆனா நம்ம இப்படி பப்ளிக்ல,நம்ம பேர நாமே ரிப்பேர் பண்ண வேண்டாம்னு தான்..இமேஜ்....இமேஜ்) 

காலேஜ் நுழைந்து மூன்றாவது மாதமே என்னை பார்த்தாலே காண்டீனில்... "ஹே தம்பி,ஒரு ஸ்ட்ராங் காபி போடு டா..சக்கரை கம்மியா அப்படிதானேமா???" என்பார் அந்த கேண்டீன் அண்ணா. "ஹி ஹி ஹி ..ஆனாலும் பயங்கர மெமரி பவர் அண்ணா உங்களுக்கு" - இது நானே தான்(வேற என்ன சொல்ல சொல்றீங்க)..

தோழிகளும், தோழர்களும் என்னை ஐஸ் வைக்கணும் என்றால், "வாங்கப்பா ஒரு காபி சாப்பிட்டுட்டு வரலாம்" என்று கிளம்பிவிடுவார்கள் அட என்னையும் இழுத்து கொண்டு தான்..

மூட் அவுட் என்றால் காபி..பிடிக்காத லெக்ச்சரர் கிளாஸ் என்றால் கட் அடித்து விட்டு காபி என வெற்றிகரமாக எனது சந்தோசத்திலேயும்,துக்கத்திலேயும்,உடல் நலகுன்றலின் போதும்,எனது தோழமைகளுடனும் எப்போதுமே ஒரு முக்கிய பங்காற்றியது,பகிர்ந்தும் கொண்டது எனதருமை காபி..

எனக்கும் காபிக்குமான சுவாரசியமான சுவைகள் நான் வேலைக்கு செல்ல துவங்கிய போது தான் அறிமுகம் ஆகியது..வேலைக்கு நடுவில் சரியாக பதினோரு மணி ஆனால் போதும் டாண் என்று பக்கத்து ஹோட்டலில் இருந்து காபி வந்து விடும்..

அந்த பில்ட்டர் காபியின் மணம்,குணம் அடிச்சுக்க முடியாதுங்க..இன்னமும் அச்சுவை நாக்கிலே உள்ளது... இக்காலக்கட்டதில் தான் முதல் முதலாக "காபி டே" சென்றது. 

ஆயிரத்தியெட்டு காபி வகைகள் இருந்தாலும் என்னை கவர்ந்தது "காப்பசினோ" மட்டுமே,வெயிட் வெயிட் நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இல்லேங்க எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிட்டு தான் இந்த முடிவுக்கு வந்தது...மேலே பஞ்சு போன்ற நுரையுடன் பார்க்கவே அழகாக இருக்கும் அதை குடிக்கவே மனம் வராது..ஆனால் அது எல்லாம் முதல் வாய் காபி சுவைக்கும் வரைக்கும் தான்,அப்புறம் சிறு கசப்பும்,இனிப்பும் ஆன அப்பானத்தின் சுவையே அலாதி தான்..

அதற்கு அடுத்த ஒரு வருடத்தில் எல்லா விதமான காபியின் சுவையும் எனக்கு அறிமுகமும்,அத்துபடியும் ஆனது, அதிலும் நம் தமிழகத்துக்கே உரித்தான பில்ட்டர் காபி,வர காபி,சுக்கு மல்லி காபி ,கருப்பட்டி காபி,எனக்கு பிடித்த திருவல்லிக்கேணி ரத்னா கபே காபி,முருகன் இட்லி கடை காபி மற்றும் சரவண பவன் காபி என என் விருப்பப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அன்று எங்கள் வீட்டில் எல்லோரிடத்திலும் ஒரு பரபரப்பு வீட்டின் முதல் பேத்தியான என் அக்கா விசேஷமாக இருந்தாள் என்பதே அதற்கு காரணம், அம்பத்தூரை அடுத்த ஒரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அச்செய்தியை உறுதி படுத்த சென்றோம்..அப்பொழுதும் அக்கா தான் முதலில், " ஹே ப்ளீஸ் ஒரு காபி வாங்கி கொடேன்" என ஆரம்பித்தாள். 

அவள் ஆசையை நிராசை ஆக்க விரும்பாமல் காண்டீனில் போய் எனக்கும் சேர்த்து காபி வாங்கி வந்தேன்..பயண அலைச்சலோ, இல்லை உடம்பின் சூடோ, இல்லை தேவையில்லாத அக்காவின் பயமோ..காபி குடித்து கொண்டிருக்கும் போதே அக்காவின் முகம் அஷ்ட்டக்கோணலானது. அதற்கு இரண்டு தினங்கள் கழித்து அக்கா வெறும் வயிற்றுடனும், மனது முழுதும் பாரத்துடனும் வீடு வந்து சேர்ந்தோம்..

அன்றிலிருந்து இதோ இந்த மழை நாளின் போதும் நான் காபி குடிப்பதில்லை..ஒவ்வொரு கப் காப்பியும் என் அக்காவின் அன்றைய தினத்தையே ஞாபகப்படுத்துகிறது. அந்நினைவு மனதை பிழிகிறது,முன்னர் இதே காபி எனக்கு பலசமயங்களில்,பலவற்றை மறக்க உதவி செய்திருக்கிறது. ஆனால் இன்று காபியை தொடவே மனம் விரும்பவில்லை.

யாரால் நான் காபியை வெறுத்தேனோ, அவள் இன்று வரை நாளுக்கு மூணு காபி என சுகபோகமாக அனுபவிக்கிறாள் ஆனால் என்னால் முடியவில்லை..

மழை நாளும் என் மனதிற்கினிய காபியும் ... என்றும் என்னில் இருக்கும்...

இதோ இந்நன்னாளில் உங்களை போன்ற ஒரு தோழியுடன் காபி குடிக்க மனம் விரும்புகிறது.."மச்சி ஒரு காபி சொல்லேன் ப்ளீஸ்"...


பி.கு

என்னையும் உற்சாகப்படுத்தி இதை எழுத தூண்டுகோலாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.

என்னை போன்ற காபி பைத்தியமான(இன்றும்) பிரியதோழி பானுவிற்க்கும், வாழ்வில் காபியே குடித்து அறியாத ஆஷா அக்காவிற்கும் இது சமர்ப்பணம்.