Pages

Thursday 15 September 2011

நீயே நானாக

மனதின் ஓரங்கள்
கூர் தீட்டிய கத்தியாய்
நீட்டியிருந்தும்
உன் நினைவுகள்
காயப்படுத்துகின்றன
என்னை...

விரல் கோர்த்தும் 
விலகி செல்கின்றன
ஓர் புள்ளியாய்
இணைந்த நம் 
எண்ணங்கள்...

இறகுகள் உதிர்ந்தது
சருகாய் போகின்றன
நமக்கான
கற்பனைகள்...



Saturday 10 September 2011

பாரதி

பெருங்கவியின் நினைவு நாள் இன்று...

முண்டாசு கவிஞன் தன் மூச்சுக்காற்றை இந்த இந்திய மண்ணில் விட்டு சென்ற நாள்..

தன் கவிதை என்னும் சாட்டையடியால் தூங்கி கொண்டிருந்த தமிழனை தட்டி எழுப்பிய
தன்மானமிக்க தமிழ்கவிக்கு வருடம் இரண்டு நாள் மட்டுமே தம் அஞ்சலியை செலுத்தும் நம் மக்களை என்னென்று சொல்வது ...

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தையே அழிக்க சொன்ன மாபெரும் தலைவன்...

உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் அச்சமில்லை அச்சமில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி வெள்ளையனின் நரம்பை கூட பயமுறுத்தி பார்த்த மாபெரும் வீரன்....

காலனே நீ வந்தால் காலால் எட்டி உதைப்பேன் என்று கர்ஜித்த கவிஞன்...


ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று சுதந்திரம் கிடைக்கு முன்பே ஆடிப்பாடி சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த கலைஞன்...

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்று வேதனையில் வெந்த மனிதன்....

வெறுங்கதைகள் பேசி வேடிக்கை மனிதனை போல் வீழ்வேனென்று நினைத்தாயா என்று கொக்கரித்த கவிஞன்...

கூழை கும்பிடு போட்டு வெள்ளையனுக்கு துணை நின்ற வெட்கம்கெட்டவர்களை பார்த்து நெஞ்சு பொறுக்குதில்லையே என்று புலம்பிய புலவன்...

ஆதி அந்தமான இறைவனை சின்ன சிறு பிள்ளையாக்கி தாலாட்டு பாடிய தாயுமானவன்...

எமக்கு தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல் என்று இறுமாப்புடன் ஆங்கிலேய நீதிபதிகள் முன் சொன்ன சுதந்திர போராட்ட வீரன்....

சிந்து நதியில் சேர நாட்டு பெண்களுடன் , சுந்தர தெலுங்கில் பாட்டிசைத்து, வங்க தந்தங்களை பண்ட மாற்று செய்து, இலங்கைக்கு சேதுவை மீண்டும் கட்டி வீதி செய்வொம், நாட்டில் உள்ள நதிகளை ஒன்றினைத்து எங்கள் நாட்டை வல்லரசாக்குவோம் என்று கனவு கண்ட பொதுனலவாதி...

கல்வி சாலைகள் வைப்போம், ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம் , உண்மைகள் சொல்வோம், பல வன்மைகள் செய்வோம்....

ஒப்பிலாத சமுதாயம் உருவாக உண்டி சுருக்கி பாட்டினை படைத்த தன்னலமற்ற தலைவனை இனி வரும் தலைமுறைக்கும் எடுத்தியம்புவோம்...

இரு நாளல்ல ஒவ்வொரு நாளும் இப்பெருங்கவியை போற்றி வணங்குவோம்.....