Pages

Friday 15 June 2012



அதீதத்தில்......






இறுக்கி கோர்த்துக்கொள்ளும்
கரங்களுக்கிடையில்
நேசங்களை புதைத்து
வைத்துக்கொள்கிறாய்

முன்னெப்போதும்
அறிமுகமில்லா வார்த்தைகளின்
குளிர்வை அனுபவிக்க
கொடுக்கிறாய்


அறையின் வெதுப்பில்
சிற்சில முரண்கள்
வெந்து தணிகின்றன

இடமாற்றம் செய்யப்படும்
காதல்கள் ஒலிகளின்
மயக்கத்திற்காய் காத்திருக்கையில்

விலகிவிடுதலுக்கான
பிரயத்தனங்களாய்
மௌனங்களை
மென்று கொண்டிருக்கிறேன்

என்றோ எப்பொழுதோ
நடந்த பாதையின்
நீட்டலில் நடந்து செல்ல.

Saturday 9 June 2012

நவீன விருட்சத்தில் ....

 

சதுரங்கள் மடித்த
முக்கோணங்களாகவோ
வட்டங்களாகவோ
செவ்வகவமாகவோ தான்
எப்போதும் இருக்கின்றன
வீடுகள்


வெறுப்புக்களும்,
நிராசைகளும்,
சலிப்புக்களும்
புகைந்து வெளியேறிக்கொண்டே
இருக்கின்றன .

தங்கசங்கிலிக்குள்
புதைந்த சம்பிரதாயங்களின்
ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன


கடமைகள்,பொறுப்புக்கள்
வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன
அசல் பிரதிகளை போல

எப்போதாவது தான்

பசியாற வைக்கும்
உணர்வுகள் சங்கமிக்கும்
அன்பை மட்டுமே
போதிக்கும்
உள்ளாழ்ந்து பக்தி
செலுத்தும் இடமாக
இருக்கின்றன வீடுகள்.

நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

http://navinavirutcham.blogspot.in



சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல

எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல

புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்

ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..


Tuesday 5 June 2012


குறி இதழில் வெளியான இரு கவிதைகள்:-

சொல்லத்துணியாத
வார்த்தைகளின் சேகரிப்புக்கள்
மௌனங்களாக உன்னிடம்
வந்து சேர்ந்தும்
ஒலிகளின் மயக்கத்திற்காய்
காத்திருக்கிறாய்.

வார்த்தைகள்
சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்..


ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
இருந்தும் வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.