Pages

Friday, 26 August 2011

புகைவண்டி











கொலுசு சத்தம்

தாளம் தவறாமல்

தடதடத்து தாலாட்டி

தண்டவாள பாதையில்

இடறி விடாமல்

இழுத்து போவாய்

உன் பெட்டிப் பிள்ளைகளை..





காட்சிகள்

கண்ணாமூச்சிக் காமிக்கும்

உன்னில் பயணிக்கையில்





தென்றலுடன்

சில சமயம்

கதைப்பேசிக் கொள்வேன்





உன் தாளத்துக்காண

வார்த்தைகள்

தேடி திரிவதிலேயே

பயணம் முடிந்துவிடும்...





தூக்கம் கலைந்த

கடுப்புடன் மேல்

விழுந்து ஓடும்

சில மனித இயந்திரங்களை

நொந்துக்கொண்டு

தாய் மடி சுகத்தினை

என்னைப்போல் ஒருவனுக்காய்

விட்டுக்கொடுத்து விடைபெறுகிறேன் நான்...

நீயே நானாக






விரல் பிடித்து

நடக்கையில்

உன் நரம்புகளின்

ரத்த அதிர்வுகளில்

கூட என் இதய

துடிப்பினை உணர்கிறேன்....




கனவுகளின் கலைதல்கள்

பெரும்பாலும்

உன் நெஞ்சின்

கதகதப்பிலே

கழியும்...




நீயில்லாத நாட்களின்

நீட்சியை குறைக்க

நீயே நானாக

நிறைந்து நிம்மதி கொள்கிறேன்...

Friday, 19 August 2011

கனவு








நெடுநாளாய் எனக்கு

ஒரு கனவு வரும்

ஒரு பாதையின் எதிர்பாரா

திருப்பத்தில் ஒரு தேவதை

பூங்கொத்தை வைத்துக்கொண்டிருப்பது போல்..




வழக்கமாய் போய்விட்டதால்

பெரிதாய் எடுத்து கொள்வதில்லை..

நேற்று உன்னை பார்த்த பின்

தான் தெரிந்தது வந்தது ஒரு

காதல் தேவதை என்று...




உலகில் படைக்கப்பட்ட

காதலை எல்லாம்

உன் கையில் கொடுத்தனுப்ப

காத்திருந்தது என்று...




ஒரு பூவையேனும்

என்னிடம் கொடுத்திருக்கலாம்

என் கனவின் வழியே உன்னை

சந்திக்க தெரிந்த தேவதைக்கு

என்னை சந்திக்க

மனமில்லாமல் போனதற்க்கு

காரணம் என்னவாயிருக்கும்..




காத்திருக்கிறேன் கனவு காண

தயவு செய்து என்னை

தொந்தரவு செய்யாதே

கனவில் என் காதலா.....

Thursday, 18 August 2011

வெறுமை


உச்சி வெயிலில் 
வெற்றுடம்புடன் 
மருள் பார்வையில் 
மயங்கி புடவையின் 
நுனி பற்றி இழுத்தும் 
கவனம் கார் கண்ணாடியிலும்
சிக்னல் விளக்கிலும் ...

கைசேர்த்த காசுகள் 
ஒரு பாலாடை பாலுடன் 
சிறிது மதுவும் ஊற்றி 
மயக்கத்தை உறுதிபடுத்தி 
வாகன ஊர்வலத்தில் 
இடைசெருகி 

மாலை நேர 
கணக்கு முடித்து 
கமிஷன் வாங்கி 
சேயை அதன் தாயிடம் 
சேர்க்கையில் கண்ணில் 
நிழலாடியது தன்னை 
விற்றுப்போன  
தாயின் முகம் .....

Wednesday, 17 August 2011

அவள்


சில்லென்ற காற்று என்னை மோதி சென்றபோது கிட்டத்தட்ட வீடிருக்கும் வீதிக்கு வந்து விட்டேன் . உறுதியாய் எனக்கு தெரியும் இன்று அவள் என்னை பார்க்க வருவாள் என்று.



கவலை மறந்து ஒரு சிறிய சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்த என்னை வித்தியாசமாக தான் பார்த்தார் என் அம்மா.. எனக்கு பிடித்த பாடல் வானொலியில் ஒலிக்க சிறு துள்ளலுடன் ஓடி சென்று புத்துணர்வு பெற்றேன் ... சரியாக சொல்லவேண்டுமெனில் என் பிறந்த நாளில் தான் அவளை சந்தித்தேன் எனக்கு விவரம் தெரிந்து, என் வாழ்வின் முக்கிய தினங்களில் அவள் கண்டிப்பாய் வருகை தருவாள்.அவள் வந்த நாளில் நான் தவறாமல் கவிதை எழுதியிருப்பேன் .



அவள் வருகைக்காக காத்திருப்பதும் காத்திருந்து ஏமாறுவதும் சில நாள் .. நம்பிக்கையோடு காத்திருக்கும்போது ஏமாற்றாமல் வந்தும் விடுவாள் சில நாள்..



ஏமாந்த நாட்களில் இருக்கட்டும் எப்படியும் என் வாயிற்படியை மிதித்து தானே ஆக வேண்டும் என்று இருமாந்திருப்பேன், அவள் வருகைக்கான முன்னறிவிப்புகள் வரத்தொடங்கியதும் கோபங்கள் காற்றிலே போகும் .



சிறிது காலமாய் அவள் முக்கியமாக படவில்லை என்னுள் புதியதாய் மலர்ந்த காதலினால், சில நாட்களாக நான் அவளை ஏமாற்ற தொடங்கியிருந்தேன் , அவளை பற்றி நினைப்பதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை...அதனாலோ என்னவோ அவள் வருகையை நிறுத்திவிட்டாள்...



இரண்டு மூன்று நாட்களாக என் காதல் துணையுடன் ஏற்பட்ட பிணக்கினால் நான் மீண்டும் அவளை நினைக்க ஆரம்பித்தேன் , அவளை தவிர யாரிடம் பகிர்ந்து கொள்ளமுடியும் என் துக்கத்தை....



எனக்கே வெட்கமாயிருந்தது அவளை நினைத்து பார்க்கவும் அவள் வருகைக்காக எதிர்பார்ப்பதற்கும், என்ன செய்வது அவளிடம் மானசீக மன்னிப்பு கேட்கிறேன் ....இன்று எல்லாவற்றையும் விட அவள் முக்கியமாக படுகிறாள் ...



அவள் வருகைக்கான அறிகுறிகள் மாலையில் தென்பட ஆரம்பித்ததுமே அவள் என்னை மன்னித்து விட்டாள் என்று பெருமகிழ்ச்சி கொண்டேன் ...



ஏமாற்றி விடுவாளோ என் மேல் உள்ள கோபத்தால்... ம் ...மேகம் தன் நிறத்தை காட்டி கண்ணனை வம்பிழுக்க ஆரம்பிக்கிறது..என் கண்கள் நீர் விட காத்திருக்கிறது ...



என் கைத்தலம் பற்றி ஓர் முத்துதிர்த்தாள், என் கண்ணீரும் அவளும் ஒன்றாய் சேர்ந்ததில் என் துன்பம் கரைவதை காண்கிறேன்,பாசத்தோடு என்னை நனைக்கிறாள் என் மழை தோழி.... என்னை ஏமாற்றாமல் ...

Tuesday, 16 August 2011

நீயில்லாமல் ..



இருளை ஓளியால்

மறைக்கும் மெழுகுவர்த்தி

போல் நீயில்லாத

நாட்களை

உன் நினைவுகளால்

மறைக்கிறேன்




நேரம் கூட

கணக்கிறது

நீயில்லாத

நாட்களில்




ரயில் நிலையத்தில்

நீ எதிரில் வரும் போது

வரும் கண்ணீரை

நீயறிய கூடாதென

கண்களால் விழுங்குகிறேன்...

Wednesday, 10 August 2011

தேடல்



வேரூன்ற தேடி
திரிகையில்
நழுவுகிறேன்
பிடிமானத்தில்
மண்புழுக்கூட்டம்...




****************

இன்றைய
நம்பிக்கையின்
மிச்சம்
நாளை....




****************

Tuesday, 2 August 2011

நீயே நானாக



எதிரில் நீ வருகிறாய்
என் மனதை விட்டு
காட்சிப்பிழை ...








பிரபஞ்ச பெருவெளி
சிறிதுதான் உன்
நினைவுகளை விட ...













கண்ணீர் திவலை
தேடி பயணம்
உன் நினைவுகள்