விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
வந்தே தீரும் இந்நோய்
காதல் வந்த பின் தான்
இதயம் இருப்பது தெரியும்
இயற்கை தெரியும்
காண்பன ஆச்சரியமாகும்
வானம் வளைந்து கொடுக்கும்
வர்ணமும் கொடுக்கும்
கவிதை எழுதி பறக்கவிட
தாயின் கண் நோக்காமல்
தந்தை குரல் கேளாமல்
விழி விரிய மனதுக்குள்
பேசுவோம் யாருமில்லாமல்
சேர்த்து வைத்த
பொக்கிஷங்கள் தேவையற்று
போகும் , காதல் பரிசுகள்
விலைமதிப்பில்லாததாகும்
யாரும் சொல்லிக்கொடுக்காமலே
கண் மொழி
பரிச்சயமாகும்
பாரதியும், புதினங்களும்
பரணுக்குப்போவர்
தபூவும் , பா. விஜயும்
தெய்வமாவார்கள்
தமிழ் அழகாகும்
உவமைகளும், உருவகங்களும்
மனனம் செய்யாமலே
சரளமாய் வரும்
நடந்து தேயும் வீதிகள்
தேடி போய் நலம் விசாரிப்போம்
காதலரின் வீட்டருகில் இருக்கும்
தூரத்து சொந்த பாட்டியை
விண்மீன்கள் ஒன்றுக்கூடி
அவள்/அவன் முகமாய்
காட்சியளிக்கும்
தூக்கம் விடுமுறை
எடுத்து செல்லும்
கனவுகள் குத்தகை
எடுக்கும் பகலில் கூட
காலம் சேர்த்துவைத்தால்
சொர்க்கம்
இல்லையேல்
வாழும் வரை நரகம்
சுவடரியாமல் வரும்,
தழும்புகள் உண்டாக்கி போகும்.
காதலித்து பாருங்கள்
சுயம் புரியும்
No comments:
Post a Comment