Pages

Wednesday, 30 January 2013




நினைவுகளின் நிழல்கள்

உதிர்ந்துக்கொண்டிருக்கும்
இலைகளின் இடைவெளியில்
கரைத்துக்கொண்டிருக்கிறது உன்னைப்பற்றியதான
நினைவுகளின் நிழல்கள்.

அழுந்தப்பற்றிக்கொண்டிருக்கும்
கால்களின் விசையை நழுவச்செய்து விடுகிறது
உன் காதல் ஓய்ந்த பாதைகளின் ஈரம்.

தோற்றப்பிழைகளினூடே கரைந்து
வெற்றுப்பரப்பின் ஏதோ ஒரு மணற்துளியில்
அமர்ந்துக்கொள்கிறது உன் மீதான ப்ரியங்கள்.

கிளர்ந்தடங்கிய உணர்வுகளின் கணங்களில்
எப்பொழுதோ அடக்கி வைத்திருந்த ஒரு காதல்
முழு ஆயுளையும் ஒரு சேரப்பற்றி விடுகிறது.

வார்த்தைகள் வெளிவராது தவித்திருந்த
சூன்யப்பொழுதுகளை நிறைத்துக்கொள்கிறது
உன் பொலிவிழந்த கோபங்களின் நிறங்கள்.

அழுத்தம் தாளாது வெடிக்கக்காத்திருக்கும்
நம் வறண்டப்பக்கங்களின் தனிமை
எப்பொழுதேனும் உன்னிடம் சொல்லிவிடக்கூடும்.

ஆழப்பெரு மூச்சொன்றின் வெப்பத்தை
உன் வழித்துணைக்காய் காற்றில் செலுத்தி
உன்னுடனான பிணைப்பை விடுவித்துக்கொள்கிறேன்.


- அதீதத்தில் 





மறுதலிக்கும் கணங்கள்


தாழ்வாய் பறந்து மேலெழும்பும் பறவையின்
லாவகத்துடன் கடந்து விடுகிறாய்
என் ஒவ்வொரு பிரியத்தையும்.

மரங்களற்ற வனாந்திரத்தில் பூ தேடும்
வண்ணத்துப்பூச்சியின் பசியைவிடக்கொடிது
நீ மறுதலித்து செல்லும் கணங்கள்.

நீள் பிறப்பிற்கான வாதைகள் தொலையும் 
உன் நேசப்பரிமாறல்களை எதிர்ப்பார்த்து 
சுவாசங்களை இருத்திக்கொள்கிறேன்...


நிழல் பற்றி கடந்து செல்லும் மறு உயிராய்
என் இருப்புக்களை கவர்ந்துக்கொள்கிறாய்
வேறொருவருக்கான காதலை நீட்டித்துக்கொண்டு...



Thursday, 4 October 2012



அதீதத்தில் வெளியானது...


மீள் பிறப்பு





மன்னித்தலுக்கும் மரணித்தலுக்குமாய்
பகடையாக உருண்டு கொண்டு இருக்கிறது
வாழ்க்கை ஒவ்வொரு முறையும்

மன்னிக்க முடியாத செய்கைகளின்
பிரதிபலனாய் மரணித்துப்போவென
வலுவுற்ற வார்த்தைகளே சடங்காகிப்போகும்.

மீள்பிறப்பிற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும்
உன் வார்த்தையின் விளிம்பில் தொக்கி நிற்கும்

வலுக்கட்டாயமாக பெறப்படும் மன்னித்தல்களின்
மகிழ்வுகளில் என்னை ஏந்திக்கொள்கிறாய்

சிறு பிடிப்புக்களாய் நம்பிக்கையின்
இழைப்பற்றி சுவாசித்துக்கொள்கிறேன்

உன் விரல்களின் அசைவுகளில்
என் வாழ்வின் ஆயுளை எதிர்ப்பார்த்திருக்கிறேன்
உனக்கும் என் காதலுக்குமான சதுரங்கத்தில்..


Wednesday, 19 September 2012


மணல் வீடுகளாய் குமிந்திருந்த
ஒவ்வொரு ஞாபகத் துணுக்குகளும்
இடைவெளி பற்றிக் கரையத்துவங்கும்
வேளையில் மரணிக்கத்துவங்கியிருந்தேன்.

பொழுது சரியத்துவங்கிய அந்த நொடி
மிகச்சரியான கணமாகப்பட்டது
வாழ்வின் வெளிகள் மிகக்கவனமாய்
தன்னை இருள்சூழ ஆயத்தப்படுத்திக்கொண்டது.

இதுவரை மிகைப்படுத்தாத துயரம் தன்னை
முன்னிலைப்படுத்தத் துவங்கியது என் மரண நொடிக்கு
பிறிதொரு காரணத்தை காரணியாக்க விரும்பாமல்

விம்மிவெடிக்கும் ஒரு நினைவு மட்டும்
வெளியேற தோன்றாமல் உள் நோக்கி
பயணத்தை தொடங்கியது

மிதந்தலையும் காற்றினைக்குறுக்கி இழுத்து
இசைக்கும் குழலிசையாய் உன் நினைவுகளை
நிலை நிறுத்தி சுவாசத்தினை
கமறலென வெளிப்படுத்தி திருப்தியுறுகிறேன்

மிகப்பெரும் சரிவை நோக்கி
உருண்டோடத்துவங்கிய சுவாசம்
மென் தடைகளை வலிப்பிழிந்து
கடக்கத்துவங்கிய கணம் மெல்ல வெளியேறுகிறேன்.

Monday, 17 September 2012


உனக்கு மட்டும் நான் வித்தியாசப்பட்டதின்
காரணம் புரிந்தும் எனக்கு
ஒன்றேனும் வித்தியாசமாகப்படவேயில்லை
உன்னை ஒவ்வொரு முறை பார்க்கையிலும்.


கவிந்து நடக்கும்போதோ, 
கண்ணோடு நோக்கையிலோ
வார்த்தைகளில் குவிந்த கவனம்
மாறியதேயில்லை.

உணர்வுகளும், கருத்துக்களும்
பரிமாறிய இடங்களில்
பார்வை பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாயும்
நினைவிலில்லை.


தவறவிட்ட பேருந்துகளின் பயணங்கள்
உன் வாகனத்தில் தொடர்கையில் நானும்
என்றேனும் கவனித்தொதுங்கியிருக்கலாம்
தெரியாமல் உன் மேல் பட்டதை. 


விசைப்பலகையில் வார்த்தைகள்
தவறுதலாய் அழுத்தப்பட்டதாகவே 
இப்பொழுதும் உணர்கிறேன் நம்
தவறுகளை .

விரல் பிடிக்கையில் எவ்வித 
செல் மாற்றங்களும் உனக்குள்
நிகழவில்லையெனில் என் தோள்
பற்றும் தோழனாக இரு.


எல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே
தான் எப்பொழுதும் திருப்தி எனக்கு

தாகம் தணித்துவிடவோ
கறைகளை கழுவிடவோ
பச்சைகளை செழித்து விடவோ
கூரான கற்களை முனைமழுக்கிடவோ
இறுமாந்திருந்த கற்களை துகள்களாக்கிடவோ
கரைப்புரண்டு ஓடி கடலில் கலந்திடவோ
தான் தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்

சில வேளைகளில் பிண்டங்களும்
கீழத்தெருக்களின் எச்சில் இலைகளும்
எருமைகளின் சாணக்கழிவுகளும்
திருமணவீட்டின் எஞ்சிய விருந்தும்
ஒன்றாகவே கலந்து மிதந்துவருகின்றன.

இருந்தும் ஒவ்வொருவருக்கான நதியாகத்தான்
என்னை எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்




- நவீன விருட்சத்தில் ...

Saturday, 15 September 2012


ஒரு பரிவையோ,
ஒரு மன்னிப்பையோ,
ஒரு காதலையோ யாசிக்காத 
மௌனம் உதிர்ந்து விழுந்த 
ஒரு சருகினைப்போல் 
தன் ஆயுளை முடித்துக்கொள்கிறது.

                          *
ஒரு கவிதையின் இரு வார்த்தைகளுக்குள்
உறங்கும் மௌனம் பிறிதொரு
கணத்தில் ஒரு வார்த்தையாக
வெளிப்பட்டு விடுகிறது.
                         *

தவிப்புகளற்ற மௌனம் 
கடலலைகள் அரித்து செல்லும்
மணற்துகளின் ஏதோ ஒரு துளியாகிறது.

                        *



"முகமூடியணிந்து இடும்
சிரிப்புக்குறீயீடை விட
குரூரம் கசியும் வார்த்தைகளும்
பதிலுரைக்காத அவமதிப்புக்களும்
பேசாத மௌனங்களும்
போதுமானதாய் இருக்கிறது எனக்கு.."


யாரும் புகுந்திட முடியா
வெறுமையை சட்டென நிரப்பி விடுகிறது
ஏதோ ஒரு கவிதை..


முதல் துளி வீழ்ந்த கணம்
மண்வாசனையை பற்றிவந்ததாய் ஞாபகம்
விலக்கப்படாத ஒரு நினைவு
உள்ளுக்கும் வெளிக்குமாய்
கடந்து செல்கின்றது.

இழுத்துப்பிடித்த சுவாசங்களும்
உடல் நிறைத்த மழைத்துளிகளுமாய்
நீட்டித்துக்கொண்டிருக்கிறேன் உனக்கான
என் வாழ்வை.

இருந்தும்
தொடுதலற்ற உன்னுடனான பொழுதுகள்
ஏகாந்தத்தை நீட்டித்தது போல் இந்த
மழை இல்லவே இல்லை.

Saturday, 8 September 2012


இரவல் ஒளியில் தனித்திருந்த நிலவின்
கண்ணீர் போல் ஒற்றைத்துளிகளாய்
கரங்களில் இறங்கியது அந்த மழை.

முன்னெப்போதோ நுகர்ந்திருந்த மண்வாசனையும்
மகரந்தத்தின் ரகசிய மொழிகளை
களவாடி களித்திருந்த வண்டின் ஓசையும்
சேர்ந்து வந்ததைப்போன்ற ஒரு பிரமையும்
அக்கணத்தில் தோன்றி முகிழ்த்தலானது.

எங்கும் ருசித்திராத , ருசியே இல்லாத ஒரு
ருசியாய் இந்த மழை இன்றும் நாவில்
உருண்டோடியிறங்கியது .

மென் மழைத்துளிகளாய் இறங்கிக்கொண்டிருந்து
பெரும் மழையாய் வீழத்தொடங்கிய அக்கணம்
அற்றை நாளின் வெப்பத்துணுக்குகள்
மெல்ல மழையின் சரீரத்திற்கு இரையாகத்தொடங்கின.

தழலென்றிருந்த தேகம் தணிந்து தளரத்தொடங்க
என்னிருப்புக்கள கரையத்தொடங்கின
முழுதுமாய் மழைத்துளிகளாய் நிலத்தில்
வீழ்ந்து தெறித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்

சிதறல் துளிகளாலான என்னை நானே
ஒன்று சேர்க்க முயன்று தோல்வியுறுகிறேன்
உணர்வுகள் முகிழ்க்கும் ஏகாந்தத்தின் முன்
போதித்தத்துவம் பெற்று மகிழ்கிறேன்.

எப்பொழுதும் கிடைத்துவிடாத இந்த மகிழ்வின்
கணம் என்றாவது சிறகுடைந்த பறவையாய்
மழைக்கு முன்னான கணத்தினை
நோக்கி என்னை செலுத்திவிடக்கூடும்.

அப்பொழுதும் இந்த மழை வலுவிழந்து
காய்ந்து போகாதிருக்கட்டும்.


உனக்கென்று ஒரு கணம்

ஒரு கணத்தின் மகத்தான
வரத்தினை உனக்கு
அளித்திடக் காத்திருக்கிறேன்
நெடு நாளாய் நீ காத்திருந்த
நொடி இதுவாகத்தான் இருக்க கூடுமென
தெரிந்திருந்தும் பொத்தி வைத்திருந்ததற்காய்
நீ கோபித்து கொள்ளவும் கூடும்
இக்கணத்தினை உனக்கு பரிசாய்
அளித்திட்டால் பல கணங்களாய்
அமிழ்த்தியிருந்த உன் வேட்கைகள்
ஒருசேர என்னை தாக்கவும் கூடும்
தொடர் தகிப்புக்களை
என்னால் தாங்கவியலாது என
மிக மென்மையான காதல்களை
எனக்கு நீ பரிசளிக்கவும் கூடும்
விருப்பு வெறுப்பற்ற
தோழனாயும் நீ என் எதிர்ப்பார்ப்புக்களை
கேலிப்பேசி விடவும் கூடும்
கருணையற்ற மழையைப்போல்
நீ ஒரேயடியாய் என்னை
முகிழ்த்துவிடவும் கூடும்
இவையெல்லாவற்றையும்
நான் தாங்கிவிடவும் கூடும்
இல்லையென்றால்
உன்னிடமிருந்து கூட எனக்கான
அழைப்பு வரக் கூடும்
காலம் மட்டுமே அறிந்த நிகழ்வுக்காய்
உன் திசை நோக்கி நகர்த்துகிறேன்
என் மொத்த பிரியத்தையும்.

அதீதத்தில் வெளியான கவிதை..

Saturday, 25 August 2012


Tuesday, 24 July 2012



யாருமேயில்லாத இரவுக்குள்

பெரும்பாலும் என்னைத்தொலைத்து

விடுவதே வாடிக்கையாயிற்று என் கனவுகளுக்கு.



மீசையை நீட்டிக்கொண்டு

நாவால் உதடுவருடிக்கொண்டிருக்கும் பூனையோ

கிளைமீது தனித்திருந்து நதி நீரில்

நெளிந்து செல்லும் மீனைக்கவ்விப்பறக்கும்

மீன்கொத்தியோ,



நெடுமலையின் உச்சியிலிருந்து

தலைக்கீழாய் விழுந்துவிடவோ,

இருட்டறையில் பாம்படம்

அணிந்த பாட்டிகளின் அருகில்

மணப்பெண்ணாகவோ,



அறைமுழுதும் சிதறிக்கிடக்கும்

சந்தனத்திலும், பூக்களிலும்

பிரண்டுசெல்வதாகவோ,

இறந்துப்போன அம்மாவின்

சேலைப்பற்றி கதைசொல்வதாகவோ

பழுத்தோலைகளின் நடுவே மணல்கீறும்

சிறுமியாகவோ



ஒரு கனவும் வருவதேயில்லை

கனவுகளில் தொலைபவருக்கு

கனவுகள் வராமல்தான் இருக்குமோ.


ஒற்றை நிலை



புறந்தள்ளலின் ஒவ்வொரு

முடிவும் உன் ஸ்பரிசங்களில்

சமனப்படுத்திக்கொண்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



நமக்கான மாற்றங்கள்

ஒவ்வொரு ஊடலிலும் மிகமிகப்

பெரிதாய் மறைக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



பிணைக்கப்பட்டதற்காய்

பிணைந்திருந்து, சங்கிலி

அறுபடக்காத்திருந்து பிரிந்ததாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



ஒவ்வொரு வார்த்தையின் இறுதியும்

முடிக்கப்படாமல் கடந்ததிலேயே

ஏதோ ஒன்று உன்னிடமிருந்து முடிக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.





வெற்றிடக்குமிழினுள் அடைப்பட்டிருந்த

காற்றாகவே நீ இருந்ததாய்

எனக்கு காண்பித்து சென்றாய் என்பதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.



எனவே தான் உன் ஒதுக்கத்தின் முன்

ஒதுங்குதலுமாய்,புறக்கணிப்புக்குமுன்

புறக்கணித்தலுமாய் முன்னேறிக்கொண்டு

விரைந்து விடுகிறேன்.



சமனற்ற நிலையாகவே

தோன்றவில்லை நீ ஒதுக்கி சென்றபோதும்,

உன் தீர்க்க முடியா காதல்

தீர்ந்த புள்ளியாகவே என் ஒற்றை நிலை.



மலைகள் இதழில் வெளியாகிய கவிதை

Friday, 15 June 2012



அதீதத்தில்......






இறுக்கி கோர்த்துக்கொள்ளும்
கரங்களுக்கிடையில்
நேசங்களை புதைத்து
வைத்துக்கொள்கிறாய்

முன்னெப்போதும்
அறிமுகமில்லா வார்த்தைகளின்
குளிர்வை அனுபவிக்க
கொடுக்கிறாய்


அறையின் வெதுப்பில்
சிற்சில முரண்கள்
வெந்து தணிகின்றன

இடமாற்றம் செய்யப்படும்
காதல்கள் ஒலிகளின்
மயக்கத்திற்காய் காத்திருக்கையில்

விலகிவிடுதலுக்கான
பிரயத்தனங்களாய்
மௌனங்களை
மென்று கொண்டிருக்கிறேன்

என்றோ எப்பொழுதோ
நடந்த பாதையின்
நீட்டலில் நடந்து செல்ல.

Saturday, 9 June 2012

நவீன விருட்சத்தில் ....

 

சதுரங்கள் மடித்த
முக்கோணங்களாகவோ
வட்டங்களாகவோ
செவ்வகவமாகவோ தான்
எப்போதும் இருக்கின்றன
வீடுகள்


வெறுப்புக்களும்,
நிராசைகளும்,
சலிப்புக்களும்
புகைந்து வெளியேறிக்கொண்டே
இருக்கின்றன .

தங்கசங்கிலிக்குள்
புதைந்த சம்பிரதாயங்களின்
ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன


கடமைகள்,பொறுப்புக்கள்
வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன
அசல் பிரதிகளை போல

எப்போதாவது தான்

பசியாற வைக்கும்
உணர்வுகள் சங்கமிக்கும்
அன்பை மட்டுமே
போதிக்கும்
உள்ளாழ்ந்து பக்தி
செலுத்தும் இடமாக
இருக்கின்றன வீடுகள்.

நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

http://navinavirutcham.blogspot.in



சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல

எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல

புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்

ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..


Tuesday, 5 June 2012


குறி இதழில் வெளியான இரு கவிதைகள்:-

சொல்லத்துணியாத
வார்த்தைகளின் சேகரிப்புக்கள்
மௌனங்களாக உன்னிடம்
வந்து சேர்ந்தும்
ஒலிகளின் மயக்கத்திற்காய்
காத்திருக்கிறாய்.

வார்த்தைகள்
சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்..


ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
இருந்தும் வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.

Monday, 28 May 2012




"
போலி கௌரவம் குறித்து சீனிவாசன் இருமுனைத்தாக்குதல்களுக்கும் சளைக்காமல் பதிலளித்த போதும், அவரை உங்களுக்கென நான் ஒரு வெளி தருகிறேன், உங்கள் முகமூடியிலிருந்து வெளிவாருங்கள் என தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்த கோபி நாத்தின் மற்றொரு முகம் ஆச்சர்யத்தையே தந்தது.. சீனிவாசனை நமக்கு பிடிக்காமல் போனால் அவரின் படங்களை பார்ப்பதை தவிர்க்கபோகிறோம், நமக்கு அதனால் எந்த வித லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.. 

விஜயின் ஆரம்ப கால படங்கள் உண்மையில் எத்தனை பேருக்கு பிடித்து இருக்கும்? இன்று அவருக்கு இருக்கும் ஒரு இமேஜ் போலியான கௌரவம் தானே.. அவருக்கு மட்டுமல்ல அரசியல் வாதிகளிலிருந்து , பணம் இருக்கும் அனைவரும் போலி கௌரவத்தின் அடையாளத்தில் தான் வாழ்கிறார்கள்.. 

கோபிநாத்தே சீனிவாசனுக்கு இன்னொரு முகமூடி தர அத்தனை பிரயத்தனப்பட்டது நன்றாகவே இல்லை. மேலும் ஒரு தனிப்பட்ட மனிதரை அத்தனை பேர் முன்னிலையிலும் இத்தனை கேள்விகளை கேட்டதும், அதற்கு பொருத்தமான ஏளன சிரிப்புக்களை சரியாக எடிட் செய்து அந்த இடத்தில் காட்டியதும் அந்த நிகழ்ச்சி மீதான் மரியாதையை குறைத்தது.

பிரபலமாக ஒருத்தர் தன் காசை செலவழித்து சிலருக்கு நன்மை செய்கிறார், அதில் அவருக்குத்தான் லாபமும், நட்டமும் ஏற்பட போகுதே தவிர நமக்கு அவரை கிண்டல் செய்து பொழுது போக்குவது மட்டும் தான் மிச்சம்.

எல்லாருமே குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்ற வார்த்தையை வாழ் நாளில் ஒரு முறையாவது சொல்லியிருப்போம். ஆனால் அப்பொழுது எல்லாரையும் போலி கௌரவத்திற்காக தான் நீங்கள் இந்த வார்த்தையை சொல்கிறீர்கள் என சொல்ல முடியுமா?? அதை வந்திருந்த எழுத்தாளரும் முழுமையாக ஆட்சேபித்தார்.

 இதையே கமல், ரஜினி, விஜய் நற்பணி மன்றங்கள் சேவை செய்கையிலோ இந்த நீயா நானாவில் ஒரு முறையாவது அதை எதிர்த்து இருக்கிறார்களா? சூர்யா ஒரு நடிகராக தன்னை முன்னிருத்தி ஆரம்பித்த அகரம் அறக்கட்டளைக்கு அவ்வளவு விளம்பரம் கொடுத்த விஜய் தொலைக்காட்சி, நீங்கள் சாதாரண மனிதராக இருந்து தான் இச்செயலை செய்ய வேண்டும், ஒரு நடிகராக போலி கௌரவத்திற்காக இதை செய்ய கூடாது என சொல்லவில்லையே.. தான் பிரபலமாகிய பின் சேவைகள் செய்தால் அது உடனே மக்களுக்கு சென்று சேரும் என சீனிவாசன் சொல்லியிருக்கிறார், அவருக்கு சந்தர்ப்பம் தான் தந்து பார்க்கலாமே.. அப்படி செய்ய வில்லையெனில் பின் இவர்கள் கேள்வி கேட்கட்டும், ஒரு தனி மனிதன் ஒரு அடியை முன் வைக்கும் முன்னே அவரை இப்படி அசிங்கப்படுத்தியது ஊருக்கு இளைத்தவனை கோமாளியாக்கி பார்த்த கதையாகத்தான் தோன்றியது.."